28 April 2024

தோ நாடகம் போலவே இருந்தது. யார் இயக்க நடக்கிறது இதெல்லாம். சித்தார்த்தனுக்கு தலை சுற்றினாலும்… தலை சுற்றலில் ஒரு கற்றல் இருப்பதாகவே இருந்தது. இந்த வாழ்வின் அடித்தளம் கியூரியாசிட்டி. அதன் நீட்சி தான் எல்லாம்.

கோத்தகிரி குளிர் வாட்டி வதக்கி கொண்டிருக்கிறது. உள்ளும் புறமும்… வெளியும் உள்ளும் மாறிக் கொண்டே இருப்பதை இந்த இரவு எதையோ கடித்து கடித்து சொல்லிக் கொண்டிருக்கிறது. முகம் தெரியாத குறுஞ்செய்தி. அதை நம்பி இத்தனை தூரம்… இரவை துழாவிக் கொண்டு வருவது எதன் நம்பிக்கை என்று தெரியவில்லை. ஆனாலும் ஆதி மனம் தேடி தொலையத்தான் விரும்பும். வந்தது நண்பனின் தம்பி திருமணத்துக்கு தான் என்றாலும்… வந்த இடத்தில் வழக்கம் போல தேடுதல் வேட்டை தான். குளிர்கால இரவில் குரங்கு மனம் வாய்க்கும் போல.

“50 லட்சம் வேண்டுமா… நீ படித்த பள்ளிக்கு இப்போதே செல்.”

இப்படி ஒரு குறுஞ்செய்தி மட்டும் வந்திருந்தால்… வேலையற்றவர்களின் வலை என்று ஒதுக்கி இருப்பான். கூடவே “உன் கோகிலா காத்திருக்கிறாள்” என்றும் இருந்தது.

“மீண்டும் கோகிலாவா…?!…”

மனதுக்குள்… நொடியில் பள்ளி நாட்களின் மைதானம் விரிந்து கலர் கலராய் இலைகள் பறக்க… இமைகள் மூடி இசையை உணர்ந்தான். கிட்டத்தட்ட இருபது வருடங்கள். மறந்தும் போகலாம் என்பதான கால கட்டம். மீண்டும் மீண்டும் குறுஞ்செய்தியை படித்தான். அது குறுஞ்செய்தி போல இல்லை. அதில் பெரும் செய்தி இருப்பதாக தோன்றியது. இந்த இரவில்… யாருக்கு…. யாருக்கு கோகிலாவை தெரியும்…! யாரோ… விளையாடுகிறார்கள். அல்லது வினை ஆற்றுகிறார்கள். கவனம் தலைக்குள் ஓரிடத்தில் குவிந்தது.

விளையாடும் நண்பர்கள் மொத்தமாக மனதுள் செய்தி டைப்பிட்டார்கள். அவனா…. இவனா… அவன்… இல்லை… அவன்… இல்லையே… என்ன கணக்கு இது… கோத்தகிரிக்கு ஒரு திருமணத்துக்கு வந்த செய்தி யாருக்கும் தெரியாதே. பின்ன எப்படி. அதுவும் தான் படித்த பள்ளிக்கு… அதுவும்… கூட படித்த கோகிலா பற்றி தெரிந்திருக்கிறது என்றால்… விஷயம் விளையாட்டல்ல. அதையும் தாண்டி யார் இந்த செய்தியை அனுப்பினது என கண்டுபிடிக்க தூண்டிய… கியூரியாசிட்டி.

நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கிறது. கூட்டத்தில் இருந்து விலகி.. தனித்த நடை. தவித்த நடையும் தான். இனம் புரியாத இருளில் மனம் நெருடும் ஒளி… வழி நடத்தியது. கழுத்து வழியே சுழன்ற குளிர்… கன்னம் நடுங்க… பற்களை படபடக்க செய்தது. இமை மூடினால் சூடு சேரும் உடல் என… இமை திறக்கும் போதெல்லாம்…ஸ்ஸ்ஸ்ஸ்… என வாய் வழியே புகை கிளம்பியது. திரும்பும் பக்கமெல்லாம்… வடிவமற்ற வாயு. பனி நிரம்பிய சூழலில் பௌத்தம் தான் அங்கிருக்கும் நிலையாமை. முன்னும் பின்னும் நகராத சிந்தனையை குவித்திருந்தது கோகிலா என்ற பெயர். இவள் எப்படி இங்கு…. இருக்க முடியும். திருமணத்துக்கு பின் ஓசூரில் வாழ்வை தொடங்கியவள்.. என்ன கணக்கில் இங்கே இப்போது. முகவரி அற்ற கடிதம் போல அந்த பனி விழுந்த புல்வெளிகளின் வழியே ஒரு புதிர் நீண்ட முயல் போல நடந்தான்.

இருளின் வழியே கசியும் இசையை ரசிக்கவும் முடியாத ராட்டின வேதனை இது. பாழடைந்த கட்டடம் போல இரவுக்கு வேறு கண்கள். புதுப்பிக்கப்பட்ட பள்ளியாக இருந்தாலும்… மனதுக்குள் நிற்கும் பால்ய பள்ளி வாசலில் ஒரு யாரோவாய் நிற்பது சற்று பயத்தைக் கொடுத்தது. பள்ளி வாட்ச்மேன்… ஸ்வெட்டர் குல்லா சகிதம் நாற்காலியில் சரிந்திருக்க… நியாயமான வழி… வேலைக்கு ஆகாது. எகிறி குதிக்கையில்… இதயம் நெற்றி முட்டியது. அதே உள் மைதானம். மரங்கள் சூழ்ந்த மௌன மொழி. வெற்றிடம் வழுக்கிக் கொண்டே இருக்கும் பள்ளி வாசம். ஒவ்வொரு கட்டடத்திலும்… ஒவ்வொரு நினைவு. உடைபட்ட ஊஞ்சலின் பெருங்குரல் உடைதல் மூளைக்குள் மேலும் கீழும் அசைந்தது.

எங்கிருந்து இது தொடங்கி இருக்கும். எதுவரை இதில் நிஜம் இருக்கும்… சட்டென நின்று சுற்றி பார்க்க தோன்றியது. சுற்றி பார்த்தான். இரவு இருபது வருடங்களாக நிறைந்திருந்தது.

“இங்க எப்படி கோகிலா…?” அனிச்சையாய் அலைபேசியை எடுத்தான். ஆல்ரெடி அடுத்த செய்தி வந்து குத்த வைத்திருந்தது.

“நீ படித்த பதினொன்றாம் வகுப்புக்கு செல். கோகிலா காத்திருக்கிறாள்…” – திகில் அடித்த பெருமூச்சு தொண்டைக்குள் இறுக்கி கவ்வியது.

ஏனோ கைகள் நடுங்க தொடங்கி விட்டன. காதுக்குள் இரவின் சத்தம் எதையோ திருகியது. நண்பர்களை அழைத்து வந்திருக்கலாமோ.. ஒருவேளை… கோகிலா செத்து போயிருப்பாளோ… இது ஏதாவது ட்ராப்பா… இந்த இருட்டில் இந்த நேரத்தில்…. இருபது வருடங்களுக்கு முந்தைய காதலி தனக்காக காத்திருப்பது… என்னவாக இருக்கும்…பள்ளி நாட்களில் அவளை பிரிந்து தவித்ததெல்லாம் கருப்பு வெள்ளையில் கணத்தில்… நெற்றியில் ஸ்க்ரோலிங் ஆனது. அசையாத மரங்கள் நிழல் ஓவியங்கள் போல தெரிந்தன. மதிய சோற்றை இந்த மரங்களின் அடியே தான் பள்ளி நாட்கள் கொண்டிருந்தன. இல்லாத காக்கைகளின் சப்தம் நொடியில் ஒரு மூலையில் தொடங்கி மறுபக்கம் வேக வேகமாய் வந்து அடங்கியது. மர்மத்தின் வாசலில் இல்லாத மல்லிகை பூவின் வாசம்.

கால்களில் கவன ஈர்ப்பு. நிலவில் நடப்பது போல நினைத்திருக்கலாம் ஒவ்வொரு விரலும். அழுந்த பதிந்து ஆழம் விடுத்து… நடக்கையில்… இதெல்லாம் எதற்கு… திரும்பி விடலாம் என்று உள்ளே ஓர் எச்சரிக்கை குரல். ஆனாலும்… இதன் பின்னால் இருப்பவர் பற்றி தெரிய வேண்டும். கண்டிப்பாக இங்கே ஆட்கள் மறைந்து இருக்கலாம். இது ஏதோ ஒரு விளையாட்டு மாதிரியாக கூட இருக்கலாம். விளையாடுவது யார் என்று தெரிய வேண்டுமானால்… அவர்கள் போக்கில் போய் தான் பார்க்க வேண்டும். இயல்பாகவே தேடல் கொண்ட சித்தார்த்தனுக்கு இந்த விளையாட்டு உள்ளூர பிடித்தே இருந்தது. காலில் படும் சருகுகளின் வழியே காலத்தை உடைப்பது போன்ற பிரமை. சுற்றிலும் பயம் இருந்தாலும்… தன்னுள் தானென்ற தைரியம் இருக்கத்தான் செய்தது. பதினொன்றாம் வகுப்பின் வாசலில் நின்றான். தான் படிக்கும் போது இந்த வாசல் தான் பதினொன்றாம் வகுப்புக்கு வசந்தம் திறந்து விட்டது. இப்போது வேறு வகுப்பாக கூட இருக்கலாம். கணக்கிட்டுக் கொண்டிருப்பவன் அறியாமலா இருப்பான்.

வைப்ரேஷனில் பேண்ட் பாக்கெட் அதிர்ந்தது. தெரியும். இன்ஸ்ட்ரக்சன் ஆன் தி வே. வேகமாய் எடுத்து… விரலைத் தொடுத்து திரையை திறந்தான்.

எதிரே பெருங்கதவு இருக்கிறது.

ஆம் தெரிந்தது தானே. திறந்து இடது பக்கம் இருக்கும் 50 லட்சத்தை எடுத்துக் கொள். ஆனால் வலது பக்கம் சென்று கோகிலாவை கொன்று விட்டு செல்.

சடுதியில் வியர்த்து மூச்சு விடும் சத்தம் காதில் புகை போவது போல உணரப்பட்டது. கண்கள் கதவில் சற்றே பெரிய பல்லியை போல ஒட்டிக் கொண்டது. ஜவ்வு மிட்டாய் முனையை பிடித்திருப்பது போல சற்று அவனையும் அறியாமல் பின்னால் நகர்ந்தான். அசைவற்று நகர்வது அனிச்சையின் அளாவல். மீண்டும் செய்தியை தெளிவாக படித்தான்.

கோகிலாவை கொன்று விட்டு 50 லட்சம் எடுத்து செல். அல்லது 50 லட்சத்தை மறந்து விடு. கோகிலாவை கூட்டி செல்.

அலைபேசி திரையையே வெறித்து பார்த்தான். யார் இதெல்லாம் செய்வது. எதற்காக செய்கிறார்கள். கண்டிப்பாக கோகிலாவுடனான காதல் கதையை நன்கு அறிந்தவர் தான் இதை செய்ய முடியும். ஆளும் கட்சியில்… பெரிய ஆளாக இருக்கும் சிகாமணி இதை செய்து கொண்டிருக்கிறானா. தேசிய கட்சியில் முன்னாள் மந்திரி ஒருவருக்கு பினாமியாக இருக்கும் லட்சுமிநாதனா. காமெடி நடிகனாக இருக்கும் பொங்கியண்ணனா….? யார் இதை செய்வது. எப்படி நம்புவது…. உள்ளே கோகிலாவோ பணமோ இருப்பதை. கண்கள் சுற்றிலும் சுற்றியது. யாரோ வீடியோ எடுத்துக் கொண்டிருப்பது போல எண்ண சுழற்சி. வேகமாய் திசை விட்டு நடக்க ஆரம்பித்தான். உள் மைதானத்தில் நடக்க நடக்கவே ஓட வேண்டும் போல.. உள்ளே எதுவோ உந்தி தள்ள… ஓட ஆரம்பித்தான்.

இது தேவையா….? வந்தது கல்யாணத்துக்கு.!.. அட்டன் பண்ணிட்டு ஊரை பார்த்து போறத விட்டு…. கொலை கேஸ்ல சிக்குனா….என்னாகிறது….?

ஓடினான். ஓடினான். பள்ளி உள் மைதானம் முழுக்க ஓடினான். அவன் கால்கள் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. வெளியேறும் கேட் நோக்கி ஓடாமல் எதிர் திசையில் ஓடினான்.

வட்டம் பூமியில் இருக்க.. கால்களின் திரும்பல்கள் மீண்டும் மீண்டும் அதே புள்ளிக்கு திரும்புவது நிகழ்வது. நிகழ்ந்து முடிக்கையில் அவன் கை பதினொன்றாம் வகுப்புக்கு எதிரே நின்ற மரத்தில் மூச்சிரைக்க முட்டுக் கொடுத்து நின்றது. கையில் தழும்பு தட்டுப்பட்டது போல உணர்ந்தான். அத்தனை குளிரிலும் மனதுக்குள் ஒரு கம்பளி சூடு நொடியில் கொப்பளித்தது. என்ன இது என்பது போல அலைபேசியின் ஒற்றைக் கண் திறந்து கையில் தட்டுப்பட்ட கோட்டில் காட்டினான்.

இருள் மீறிய கண்களில் அதீத ஒளி போல கண்களை அழுந்த மூடி மீண்டும் திறந்தான். காம்பஸில் இதயம் வரைந்து உள்ளே “சித்தார்த் கோகிலா” என்று எழுதி அம்பிட்டிருந்தது தெரிந்தது.

எப்ப எழுதினது…? இப்பவும் புதுசா இருக்கிறது என்றால்… புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

“யார்ரா அது… என்ன வேணும்…” குரலை உயர்த்துவதாக நினைத்து தொண்டைக்குள்ளாகவே பொதுவாக கட்டடம் பார்த்து பிளிறினான்.

கோபமாய் வந்து விழுந்தது வைப்ரேஷன்.

“யாரும் உன்னை கட்டாயப்படுத்தல. பணம் வேணும்னா அவளை கொன்னுட்டு எடுத்துட்டு போ.. இல்ல அவளை கூட்டிட்டு பணத்தை விட்டுட்டு போ. அதை விட்டு சீன் கிரியேட் பண்ணாத. கொன்னே போட்ருவோம்..”

மிரட்டல் மாதிரி எல்லாம் தெரியவில்லை. வலிமையான… தீர்க்கமான குறுஞ்செய்தி.

நொடிகளில் மௌனத்தை தாங்குவதை தவிர வேறு என்ன செய்ய. யோசிக்க இயலவில்லை. வேகமாய் கிளம்பி விட எத்தனித்து திரும்புகையில் ஒரு இருமல் சத்தம் எதிரே இருந்த பதினொன்றாம் வகுப்பு அறைக்குள் இருந்து.

தூக்கி வாரி போட… கண்களில் உருட்டி இருட்டை கரைக்க பார்த்தான். இதில் எதுவுமே விளையாட்டு இல்லை. முதுகு பக்கம் யாரோ நிற்பது போல திகு திகுவென கழுத்தில் வியர்வை கொப்பளித்து ஒழுகியது. காதுக்குள் இனம் புரியாத இரைச்சல். சாவுக்குள் நிற்பது போலவே எண்ண அலைகளின் இம்சை. பெருமூச்சு இழுத்துக் கொண்டான். முகத்தை விரித்து இயல்பாக்கினான். வேகமாய் திரும்பியவன் தம் கட்டிய மூச்சோடு அறைக்கு வெளியே கொஞ்சமாக திறந்திருந்த ஜன்னலை பட்டும் படாமல் தொட்டு இன்னும் கொஞ்சம் மெல்ல நகர்த்தினான்.

பார்த்த கணம் வாய் பொத்திதான் தன்னை அடக்க வேண்டியதாகி விட்டது. உள்ளே மல்லிகை பூ சூடி.. மணப்பெண் போல அமர்ந்திருக்கிறாள் கோகிலா. உடல் சற்று பருத்திருக்கிறது. கண்கள் அனிச்சையாய் அந்த அறையை சுழற்ற… எதிரே திறந்திருக்கும் ஒரு பேக்கில் கட்டு கட்டாக பணம்.

அப்படி என்றால் இங்கே நடந்து கொண்டிருப்பது எதுவுமே விளையாட்டு அல்ல. நிஜம்தான். ஒருவேளை உள்ளே சென்று நான் என்ன செய்கிறேன் என்று கேமரா வைத்து லைவாக ஷூட் போய்க் கொண்டிருக்கிறதோ என்னவோ… உலகமே… தன் செயல்களை பார்த்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ…

உடலில் உயிர் தடுமாறுவதை உணர முடிந்தது. ஜன்னலை தவிர்த்து சுவரோரம் சரிந்து சுயமற்றவன் போல கிடப்பது அப்போதைக்கான ஆசுவாசமாக இருந்தது.

கனத்த மௌனம். இரவு பூச்சிகளின் இரைச்சல் ஒவ்வொரு மரத்தில் இருந்தும். அலைபேசிக்குள் வந்து அமர்ந்து ஒளிந்து பார்த்து கொண்டிருப்பது போல இருந்தது அடுத்து சொல்ல இருந்த குறுஞ்செய்தி.

*

போகும் போதும் வரும் போதும்… “ஹேய்.. கோக்கி… ஒரு நல்ல பையன் இருக்கான்… லவ் பண்றயா… ம்ம்ம்… பண்ண மாட்டியா.. ஹாஹ்..” என்று ஒற்றை கண் அடித்து கலாய்ப்பது… பொடி கல் எடுத்து முதுகில் வீசி விட்டு திரும்பிக் கொள்வது… ஜடையை பிடித்து இழுத்து விட்டு வலிக்குதா என்று கேட்டு நமட்டை கடித்துக் கொண்டே சிரிப்பது…

“ஏன் என்னையெல்லாம் லவ் பண்ண கூடாதா…?” என்று காதுக்குள் கேட்டு விட்டு ஓடி விடுவது என்று… அவன் செய்ததெல்லாம் விளையாட்டு தான்.

“ஹேப்பி பர்த் டே கோக்கி” என்று கட்டிக் கொண்டு வாழ்த்திய போது முகம் சிவந்து உடல் சிவந்து உயிர் உருக பார்த்த கோகிலாவை மறந்து விட முடியுமா…

தூது வந்த காயத்ரி… ‘என்னென்னவோ பண்ணி அவளுக்கு இப்ப உம்மேல பயங்கர லவ்….! என்ன சொல்ற…?’ என்றாள்.

ஒரு காதல் கதையின் ஆரம்பம் இப்படி விளையாட்டில் தொடங்கியதை சித்தார்த்தும் கொஞ்சம் படபடப்போடு தான் கண்டான்.

பன்னெண்டாவது முடிந்ததுமே… நாற்பதில் இருந்த ஒரு பணக்கார சாதி வெறியனுக்கு இரண்டாம் தாரமாக கட்டி வைக்கப்பட்டு ஓசூர் சென்றது வரை தான் தெரியும். பிரிகையில்… என்னவோ செய்தது. அல்லது அழுது திரிந்த காலமும் தான் அது. எல்லாவற்றையும் மறக்கடிக்கும் சக்தி காலத்திற்கு உண்டு. அதுவும் நதி போல ஓடிக் கொண்டிருக்கும் சித்தார்த்துக்கு மறப்பதும் நினைப்பதும் விழும் இலையும்… நில்லாத இலையும்.

இரண்டாம் தாரம்… அடுத்த நான்கைந்து வருடங்களில் கணவன் மரித்து போக விதிக்கப்பட்டிருக்கிறது. வீடு வாசல்.. சொத்து.. மூத்த தார பிள்ளைகள்.. ஆடு மாடு எருமைகள்… வாய்க்கால் வரப்பு வயல்… தோட்டம் தொரவு மரங்கள் என்று ஒரு எஜமானியின் வாழ்வு கோகிலாவுக்கு. தொடர் ஓட்டம் அவளை துவள செய்து விட்டது. காசு பணம் என்று அவள் ஒரு இயந்திரமாகி போனாள். வாரிசுகள்.. சொந்தங்கள்… உறவுகள் என்று அவளை கடவுளாக்கி கும்பிட ஆரம்பித்து விட்டார்கள். அவளே நினைத்தால் கூட ஆசைக்கு ஒருவரோடு சேர்ந்து படுக்க முடியாது. போதும் போதும் என்றாகி விட்ட பொழுதில் செத்து விட தீர்மானித்தாள். உள்ளே பொங்கும் எண்ணங்களின் வழியே அவள் தன்னை சுமந்து திரிய விரும்பவில்லை. பிடிப்பில்லாத தளத்தில் மீண்டும் மீண்டும் மாடி ஏற பிடிக்கவில்லை. சொன்னால் சாகும் தேகம் கேட்டேன்… வரியில் லயித்திருந்தாள். லயிப்பின் எல்லை அவளை கிணற்று மேட்டில் நிற்க வைத்திருந்தது.

நீண்ட நெடிய தனிமையின் தகிப்புக்கு பிறகு கிணற்றில் குதிக்க நிற்கையில் தான்… அந்த அழைப்பு.

“எப்படியும் சாக தான போற. உன் காதலன் சித்தார்த்தன் கையால் சாகு. அவனுக்கு 50 லட்சம் கிடைக்கும். ஒருவேளை அவன் உன்னை கொல்லலன்னா… அவனோடு வாழும் வாழ்வின் இரண்டாம் கட்டம் திறக்கும்…” என்றார்கள்.

அலைபேசி உலகத்தில் அதிகார வர்க்கத்துக்கு யாவும் தெரியும். அவர்களுக்கு இந்த பூமி விளையாட்டு மைதானமாகி வெகு காலமாயிற்று.

பெரிய கம்பெனி. பெயர் சொன்னார்கள். பணக்கார விளையாட்டு என்றார்கள். அவன் பணத்தை எடுப்பானா உன்னை கொல்வானா என்பது தான் இந்த கேமின் பர பர trp என்றார்கள். யாருக்கும் தெரியாது. இரண்டு பணக்கார முதலைகள் பெட் கட்டி விளையாடும் விளையாட்டு என்றார்கள். கோடிகளில் பணம் புழங்குகிறது என்றார்கள். பிடித்தால் கலந்து கொள். அல்லது இந்த அழைப்பை மறந்து விட்டு கிணற்றில் குதித்துக் கொள். விஷயம் வெளியே போனால் குடும்பம் இருக்காது..” என்று கட் ஆனது.

வித விதமான யோசனைகளின் வழியே அவள் ஆல மரத்தடியில் அமர்ந்து தீர்ந்து போகும் அளவுக்கு சிந்தித்தாள். பணம் பற்றிய பேச்சாக இருந்தால் விட்டிருப்பாள். சித்தார்த் பெயர் தெரிகிறது என்றால்… அவனோடு கொண்ட உறவு தெரிகிறது என்றால்… விஷயம் பெருசு. புரிந்து கொண்டாள்.

விட்டு வெகு தூரம் வந்து விட்ட ஒரு பயணத்தின் சாலை மீண்டும் ஒரு பிடித்தமான வளைவுக்கு திரும்பினால்… சுகம் தானே.

கொஞ்சம் கொஞ்சமாக காதல் எனும் பாச கயிறு அவளை இறுக்கியதை நினைத்துக் கொண்டாள். எந்த மரத்துக்கு அடியில் இருந்து வருவான் என்று தெரியாது. அப்போது தான் பூத்தது போல ஒரு இலையின் வடிவத்தில் மிதந்தபடியே வரும் அவனை காதலிக்காமல் விட்டால் தான் தவறு. அவன் நிஜமாக சொல்கிறானா… காதல் எனும் விளையாட்டா… அதெல்லாம் தெரியாது. மெல்ல நுழைந்து மேகம் வருடும் சூரியன் அவன். அவள் காதலில் சிவக்க ஆரம்பித்த தருணங்கள் எல்லாம் தவம் கலைந்தது போல் அவள் தலை நிறைந்தது. ஆசீர்வதித்து… பூக்களின் நிறம் மறப்பது காதலின் தீபம்.

அந்த வயது… அவனும் சிறுவன்… ஒன்றும் இயலாத போது இரண்டாம் தாரம் சரி என்றே பட்டது. பெரிதாக பேச வாய்க்காத கோகிலாவுக்கு காலத்தின் போக்கில் தான் தன் போக்கும். ஒரு வகை பக்கீர் மனநிலைதான் சிறுவயது முதலே. எதிலும் பற்றில்லாத எதிலும் ஒட்டாத தாமரை இலை நீர் தான் அவள். நினைத்த எதுவும் கிடைக்காத நிலவில் வாழ்ந்து விடலாமா என்று வானம் பார்த்து கிடக்கும் அவள் இரவுக்கு… துணை எப்போதும் இல்லை. ஒரு மூடாக்கு எப்போதும் அவளை சூழ்ந்திருப்பதை தான் அவளும் விரும்பினாள். இந்த அறைக்குள் செல்லும் நொடிகளில் அந்த மரத்தை தொட்டு தடவி கன்னம் தேய்த்து கண்கள் குளிர்ந்து தான் சென்றாள். காதலின் வலிமைக்குள் வார்த்தைகள் இல்லை. காதலின் ஆற்றாமைக்குள் அழுவது கூட அதிகம் தான். அவள் காத்திருந்தாள். இப்போது கதவைத் திறந்து கொண்டு வர போகிறான். மல்லிகை பூவில் மனத்தின் வாசம் மௌனத்தில் கசிந்து கொண்டிருந்தது.

நேரம் ஓடிக் கொண்டே இருக்க.. மெல்ல நடந்து சுற்றி சுற்றி சுழன்ற பின்னிரவு காற்றை போல ஜில்லிட்டிருந்தான்… சித்தார்த்.

கதவை திறந்தால்… ஒரு பக்கம் காசு. ஒரு பக்கம் காதல். காதல் என்றால்… இருபது வருடத்துக்கு முந்தைய காதல். கிட்டத்தட்ட எல்லாமே மறந்து போன தருணம் தான். அவள் வாழ்வோ தாழ்வோ தனக்கு எந்த விதத்திலும் பாதிக்க போவதில்லை. அதுவும் சிறு வயது பப்பி காதல். அதுக்காக அவளை கொலை பண்ணிட்டு 50 லட்சத்தை எடுத்துக்கலாமா… ஏன் எடுத்தா தான் என்ன.. இதுவரைக்கும் நம்ம வாழ்க்கையில் அவ இல்ல. இனி மேலும் இருக்க போறது இல்ல. அதுக்காக கொலை செய்யற அளவுக்கு நியாயம் கற்பிக்க முடியுமா… வெறும் காசுக்காக… வெறும் காசா.. காசு தான் கடவுள்…. சரி அது நியாயமா வரணும்… சரி காசு எடுக்காம அவளை காப்பாத்தி கூட்டிட்டு போய்ட்டா… அதுக்கப்புறம்… அவளை கூட வெச்சுக்க முடியுமா… சரி கொலை செஞ்சுட்டு அது பிரச்சனை ஆனா…. அதை தான் தெளிவா சொல்றானுங்களே… இது பெரிய இடத்து கேம். துளி லீக் ஆகாதுன்னு. ஒருவேளை கேமரா வச்சு படம் புடிச்சிட்டு இருந்தா… முதல்ல காதலிச்ச மனுஷியை கொலை செய்யன்னு யோசிக்கறதே தப்பில்லையா… காதலியோ தெரியாத மனுஷியோ கொலை எப்பிடி சரியா வரும்… வராதுதான்… ஆனா அந்த பக்கம் 50 லட்சம்… இருக்கே… அதுக்கு முன்னால ஒரே ஒரு கொலை… அதுவும் கேமில் நடக்கற கொலை தப்புன்னு தோணல. போகும் போதும் வரும் போதும் வெச்ச கண் எடுக்காம மேல் நோக்கி கள்ள பார்வை பார்ப்பாளே… அவளயா…கொல்லனும்…

தலையை பிடித்துக் கொண்டு அந்த மரத்தின் அடியே இருட்டை கலைத்து அமர்ந்தான். அவன் கண்களில் நடுக்கம்.

“உள்ள வந்துட்டா ரெண்டுல ஒன்னும் பண்ணிடனும். இல்லன்னா இப்படியே வெளியே ஓடிடனும். அதை விட்டு உள்ள போய் ஆட்டத்தை மாத்தினா… நாளைய கேமில் மொத்த குடும்பமும் இருக்கும்.. ஜாக்கிரதை.” – குறுஞ்செய்தியில் கூர் கத்தி நுனி நாக்கு நீட்டி மிரட்டியது.

சரி எது தவறு எது… ஒன்றும் விளங்கவில்லை. 50 லட்சம் என்பது சாதாரணமா என்ன… ஒவ்வொரு மாசமும் ஓடி ஓடி.. ஓய்ஞ்சு போகிற வாழ்வு… அவனை சுற்றி இருள் தின்னும் வண்டாக சுழன்றது. என்ன பெரிய காதல்… இத்தனை வருஷம் தேடி வந்தாளா என்ன… இப்போ வந்து உக்கார்ந்துருக்கான்னா… இந்த கேம்ல அவளுக்கும்தான தொடர்பு இருக்கும்.. அவ சம்பந்தம் இல்லாம இங்க எப்பிடி வர முடியும்… அவனுக்கும் நன்றாகவே புரிந்தது. இது பிக்பாங்ஸ் மாதிரி ஒரு கேம். எல்லாமே அந்த கார்பொரேட் கனவான்கள் கண்டு கொண்டிருக்கிறார்கள். இது ஒரு ட்ரேப். உள்ளே வந்து மாட்டிக் கொண்டாயிற்று. இனி இரண்டில் ஒன்று நிகழ்ந்தே தீர வேண்டும்.

சிந்தனை காது பக்கம் சற்று நகர்ந்து விட்டதாக தோன்றியது. இடது கையும் வலது கையும் மாறி மாறி தங்களை தாக்கிக் கொண்டன. மனக்கண்ணில் மயான இருட்டில் மானுட ஒளி.

ஒரே ஒரு தவறில் எல்லாமும் சரியானால் அது தவறில்லையே. எல்லா சரியும் தவறில் தவறானால் அது சரியா.

முன்னும் பின்னும் மூடாக்கு… முகம் காண தவித்தது. மெல்ல எழுந்து ஜன்னலோரம் சென்றான். பை நிறைய காசு… கட்டு கட்டாய்…. பந்தி விரிக்க காத்திருக்கிறது. வலது பக்கம் கண்களை உருட்டினான். மல்லிகை பூ வாசத்தில்.. ஊறிய உடலோடு கண்களில் வெறுமையோடு அமர்ந்திருந்தாள் கோகிலா. கண் மை அப்பிய காலத்தை மெல்ல மெல்ல சிமிட்டி எதை யோசிக்கிறாள் என்று தெரியவில்லை. என்ன கருமாந்திர காதல் இது. இருபது வருடங்களுக்கு பிறகு இப்படி வந்து தூண்டில் இட்டு இயலாமையை குத்தி காட்டுகிறது. வாழ்வா சாவா கேம் எனில்… எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் இருப்பான்கள்… கார்பொரேட் கழிசடைகள். மனித உயிரை பணயம் வைத்து விளையாடும் அவர்களின் அதிகார மையத்தின் முன்… தான் ஒன்றுமில்லாத வயிறாக நிற்பது மயிறு போல இருந்தது.

வெங்காய விலை பெட்ரோல் விலை ஆட்டுக்கறி விலை… கண் முன்னால் ஸ்க்ரோல் ஆனது.

ரெண்டாயிரம் ரூபாய் ஏத்தறதுக்கு ஆபீஸ்ல முதலாளி ஷூவை நக்காதது தான் பாக்கி. எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைக்கிறதுன்னா அதை எப்படியாவது வாய்க்க செய்து கொள்வது தானே புத்திசாலித்தனம். எல்லாம் சரி. எல்லாம் வல்ல காதலியின் உயிரை என்ன செய்வது. காதலியை விடு. சக மனுஷியின் உயிரை என்ன செய்வது. ஒரு நாளைக்கு நூறு பேரு சிட்டிக்குள்ள சாகறான். அதுக்கெல்லாம் ஒப்பாரியா வெச்சிக்கிட்டு திரியறோம். அதுக்கு.. சக மனுஷிய கொன்றலாமா…?

தலைக்கும் இதயத்துக்கும் இடையே வெற்று முண்டமாய் நடை போடுவது வலி. சிறகிழந்த பறவையைப் போல தரையில் தவித்தான். மல்லாக்க விழுந்த கரப்பான் பூச்சியின் பரபர தான் இருட்டை களைந்து அங்கும் இங்கும் நடந்து பாக்கும் தீவிரம். எதுவுமே இல்லாமல் மீண்டும் கல்யாண மண்டபம் சென்று விட நினைத்தான். ஆனாலும் ஆதி ஆசை அவனை அபகரிக்க பார்த்தது. அதிலும் அங்கோர் காதல் மனம் அவனை கொத்தி தின்றது. கொக்கரிக்கும் இருட்டில் வெளிச்சம் ஊதி அணைத்து விடத்தான் ஆவல். ஆனாலும் இன்னொரு மெழுகுவர்த்தி எரிவதுதான் அபத்தம். ஆபத்தும். அழுகையே வந்து விட்டது. இதே வகுப்பில் அவள் ஜடையை பிடித்துக் கொண்டு “எப்டி இவ்ளோ நீளமான கூந்தல் உனக்கு…!?” என்று கேட்டு ஆச்சரியத்தில் புன்னகைத்த காலம்… புகை நடுவே நெளி வளையும் ஊதுபத்தி வாசமாய் அருகியது.

அப்படியே கொல்ல வேண்டும் என்றால்கூட… எதைக் கொண்டு கொல்வது.. வலித்தால் அழுவாளே. அழுதால் கொலையை பாதியில் நிறுத்த முடியுமா.. குழந்தை குட்டி என்று அவளின் குடும்பம் என்னாவது. என்னவோ ஆகட்டுமே. இப்போது என்ன ஆனது என்று நமக்கு தெரிந்தா இருக்கிறது… மாற்றி மாற்றி குட்டிக்கரணம் போடும் குரங்கு குட்டியை மனதில் இருந்து இறக்கவும் முடியவில்லை. மனதுக்குள் குதிக்கவும் விட முடியவில்லை. மிடில் கிளாஸ் மூளைக்குள் தடுக்கி விழத்தான் ஆயிரத்தெட்டு படிக்கட்டுகள்.

முன் பின் உலகை விட்டு செல்ல போகும் இந்த குட்டியூண்டு வாழ்வுக்குள் 50 லட்சம் மீசை முளைத்து ஆசை காட்டியது. நிரவி பரவி கிடக்கும் இருட்டுக்குள் ஒரே உருவத்தில் கடவுளும் சாத்தானும்.

அவன் மெல்ல எழுந்தான். மௌனத்தில் அழுவது ஒரு மாதிரி பழகி விட்டிருந்தது. அறை கதவை நோக்கி நடுங்கும் கால்களைப் பதித்தான். நகக்கண்கள் பத்திலும் நங்கூரம். என்ன முடிவு எடுத்திருக்கிறான் என்று அவன் முக பாவனைகள் காட்டிக் கொடுக்கவில்லை. காலத்தின் கழுத்தில் இறுகி கொள்ள தவிப்பவன் போல கண்கள் சிமிட்டவும் மறந்த இயந்திரம் அவனுள். நடந்தான். ஓர் ஊமை ஆமையின் நகர்வு அது.

சட்டென ஓடிக் கொண்டிருந்த லைவ் – டிவி அணைந்தது.

எதிர் எதிரே அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த போட்டியாளர்கள்… பணக்கார கோபத்தில் ஆளுக்கொரு ஷிட்டை கத்தினார்கள்.

“என்னாச்சு…என்னாச்சு…”

“சார் கேமரால என்னவோ பிரச்னை…. டூ மினிட்ஸ்….” என்று கூலியாட்கள் ஓடோடி கேமரா அறையில் என்னென்னவோ செய்ய….

பெட் கட்டிய பணக்கார பங்காளிகள்… ஒருவரை ஒருவர் தீர்க்கமாக பார்த்துக் கொண்டார்கள்.

இப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாது… என்பதால் ஆர்வம் இன்னும் மேலோங்க… பெட் தொகை அதிகமானது.

“அவன் கண்டிப்பாக கொன்னருப்பான்….. இந்தா இவ்ளோ…”

“இல்ல காதல் கண்ண மறைச்சிருக்கும்… காப்பாத்தி இருப்பான்…. இந்தா இவ்ளோ…”

இரண்டே நிமிடங்களில் அவர்கள் சொன்னது போல லைவ் மீண்டும் தெரிய ஆரம்பித்தது.

“எஸ்… நினைச்ச மாதிரியே காசு தான் ஜெயிச்சிருக்கு… காதலாவது கறிக்கடையாவது… வெச்சு அமுத்தினான் பாரு…” கொலை செய்வான் என்று பந்தயம் கட்டிய முதலை கொண்டாட்டத்தில் குதித்தது. எஸ் எஸ் என்று கத்தியது.

அவள் கழுத்தில் மடங்கி இருந்து கையை நடுக்கத்தோடு எடுத்த சித்தார்த் உடல் உதற எழுந்தான். நிற்கவும் முடியாத தலை சுற்றல். மெல்ல நகர்ந்து சுற்றும் முற்றும் தன்னையே பார்ப்பது போல பார்த்தான். இன்னும் மெல்ல நகர்ந்து பணப்பையை பார்த்தான். தொட்டான். தூக்க முடியாமல் தூக்கினான். அவன் முகம் வியர்த்து கொப்பளித்திருந்தது. நா வறண்டிருந்தது. ஏதேதோ யோசனை. தலை குனிந்தே நின்றான். அவளையே வெறித்து பார்த்தான். பெருமூச்சு இழுத்தபடி வகுப்பை விட்டு வேகமாய் நடந்தான். தன் பலத்தை எல்லாம் திரட்டி வெளியேறுவது போல இருந்தது. நடக்க நடக்கவே அவன் கண்கள் பொங்க ஆரம்பித்தது. அவனையும் அறியாமல் விசும்ப தொடங்கி இருந்தான்.

சற்று முன் நிகழ்ந்த எதுவும் நிகழ்ந்த அதுவல்ல…என்று தான் நம்பினான். என்ன நடந்தது ஏன் நடந்தது எதுவும் மூளையில் ஒட்டவில்லை.

கொல்ல வேண்டும் என்று தொட்டானா… வா போகலாம் என்று தொட்டானா என்று அவனே யோசிப்பதற்குள்தான் அவன் அதை அறிந்தான்.

சுவரோரம் சாய்ந்தமர்ந்திருந்த கோகிலாவின் உடல்… சூடு அடங்க தொடங்கி… சில்லிட ஆரம்பித்திருந்ததை கைகள் அறியும் போதே கணங்களில் உணர்ந்தான். உடலில் மூச்சு இல்லை. துடிப்பு இல்லை. காதலால் கன்னம் தொடுபவன் போல தொட்டு மீண்டும் உறுதி படுத்தினான். கோகிலா இறந்து விட்டிருக்கிறாள்.

சொன்னால் சாகும் தேகம் கேட்டவள் என்று அவனுக்கு தெரியாது… அவளுக்கு தெரியும் தானே.

தொட்ட கை தொட்டபடி இருக்க… உள்ளே கம்பியூட்டர் இதயம் யோசிக்க ஆரம்பித்திருந்தது. காதுகண்களில் தன்னை மறைந்திருந்து கவனிக்கும் கேமராக்களை உணர்ந்தான். சமகால மூளை சடுதியில் வேலை செய்தது. வலது கையை கோகிலாவின் கழுத்தில் போட்டான். காதலனின் கை பிடியில் மெய்ம்மறந்து அமைதியாய் இருக்கலாம் என்று தோன்றலாம் தானே காட்சி. அதன் நீட்சியில் கையை கழுத்தோடு அழுத்தம் கொடுத்து இறுக்க ஆரம்பித்தான். வேகமாய் முன்னேறி கால்களோடு கால்களை பின்னி அழுத்தி கொண்டான். அவனே அவள் உடலை அவள் அசைப்பது போலவே அப்படியும் இப்படியும் அசைத்தான். கழுத்தை நடுங்குவது போன்ற பாவித்து துள்ளினான். ஒரு கொலையை வெகு நுட்பமாக ஒரு மரணத்தில் நிகழ்த்தினான்.

வெளியே திடும்மென அடித்து சுழன்ற காற்றில் இரண்டு நிமிடங்கள் அவனுக்கானது என்பது இயற்கை விதி. கட்டான லைவில் ஒரு டெத்.

நினைத்து நினைத்து புலம்பும் கணத்தோடு வேகமாய் ஓடியும் நடந்தும் சென்று கொண்டிருந்த சித்தார்த்க்குள் கொம்பு முளைத்த புத்தன் கத்தினான். அலறினான். கர்ஜித்தான். கோகிலா எதற்காக இறந்தாளோ… தெரியாது. ஆனால் தனக்காகவும் இறந்தாள் என்று நினைக்க நினைக்க பண சுமையை விட மன சுமை கூட ஆரம்பித்திருந்தது.


 

எழுதியவர்

கவிஜி
கவிஜி
கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x