20 April 2024

ன்னுடைய அறையைப் பார்ப்பதற்கும் எனது துயரம் கூடுவதற்கும் ஏதோ தொடர்பிருக்கிறது. கலைந்து கிடக்கும் புத்தகங்களும் காதலுக்கு அடையாளமான பரிசுப்பொருட்களும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. ஜெனாலீனாவை ஞாபகப்படுத்தும் சம்பவங்கள் அறையின் மின்விசிறிக்குச் சமமாய்ச் சுழல்கின்றன. ஜெனாலீனா கடந்தவாரம் என்னிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டாள். அவளது மஞ்சள் நிறமும் சாயம் பூசிய உதடுகளும் ஏதோ ஒரு விதத்தில் என்னை வஞ்சித்துச் சென்றுவிட்டது மனதில் கொடூர வேதனையை உருவாக்குகிறது. அவளது ஒய்யாரமான நடையும் சிங்காரிப்பும் மகிழ்ச்சியைத் தந்த அதே சமயம் இப்போது ஏசி விடவும் சொல்கிறது.

ஜெனாலீனா என்னைக் காதலிப்பதாகச் சொன்னது ஒரு வெய்யில் காலம். இந்த சென்னை மாநகராட்சியில் மதுரைக்காரர்கள் வசித்தால் ஆணும் பெண்ணுமாக கோவில் கடற்கரை எனச் செல்வார்கள். ஆணும் ஆணுமாக இருந்தால் மாலைவேளைகளில் கூட்டமிருக்கும் மது விடுதிகளிலோ திறந்த உணவகத்திலோ சந்தித்துக்கொள்வார்கள். ஜெனாலீனாவை இப்படியாகப் பார்த்தசாரதி கோவில் வெளிப் பிரகாரத்தில் தற்செயலாகச் சந்தித்தது. கோவில் இப்படிப்பட்ட அழகிய பெண்ணை அறிமுகப்படுத்தும் என்பதை நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஸ்பென்சர் பிளாசாவில் பார்க்கும் எண்ணற்ற இளம் யுவதிகள் யாரிடமும் இல்லாத தனிக்கலை இவளிடம் அப்போது இருந்ததை உணர்கிறேன்.

அடுத்தமுறை சத்யம் தியேட்டரில் ஒரு பின்னிரவு காட்சி படம் பார்க்கச் சென்றபோது ஜெனாலீனாவை அங்கிருந்த காபி ஷாப்பில் சந்தித்தேன். இந்த முறை அவளிடம் பார்த்தசாரதி கோவிலில் அவளை ஏற்கனவே சந்தித்தது பற்றி தைரியமாகப் பேசத் தொடங்கினேன். அவளது வெள்ளை நிற டீசர்ட்டும் நீலநிற ஜீன்ஸ் பேண்டும் பொருத்தமாய் இருப்பதாய்க் கூறினேன். என்னைக் காதலிப்பதற்கான வாய்ப்பு பிப்டி பிப்டி இருப்பதாய் அந்தச் சந்திப்பில் கூறிச் சென்றாள். ஜெனாலீனாவை வாழ்நாள் முழுவதும் என்வசம் இருக்கச் செய்யும் எந்தச் சக்தியும் இப்போது யாரிடமும் இல்லை என்றே நினைக்கிறேன்.

அறையின் வெளிச்சம் சிறிது சிறிதாகக் கூடுகிறது. அதிகாலை வெளிச்சமும் சில்லென்ற காற்றும் மனதைப் புதுப்பித்துக்கொள்வதற்கு ஏதுவாக இருந்தாலும் துயரத்தின் வலி நிரம்பிய இவ்வேளையில் எதுவும் மனதிற்கு உவப்பானதாகவே இல்லையென்று படுகிறது.. ஜன்னலைத் திறந்துவிட்டபடி சாலையைப் பார்க்கிறேன். சிலர் மட்டும் காலை நடையிலிருந்தனர். பெண்கள் லேசான ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். அது பார்ப்பதற்கு அழகாக இருந்தும் ஜெனாலீனாவின் மீதான கோபம் எதையும் ரசிக்க விடாதபடி செய்கிறது. கசப்புகளை அந்நேரம் தூக்கி எறிய என்ன செய்ய வேண்டுமெனத் தெரியவில்லை. அவள் மீதான வெறுப்பு என்னுள் அதிகரித்து படியே இருந்தது. ஈரபதமிக்க காற்று ஜன்னலின் அருகிலேயே நிற்கச் செயத்து. உடலின் ஒத்துழைப்பிற்கும் மனதின் கசந்த வெறுப்பிற்கும் தொடர்பே இருப்பதில்லை. இரண்டு பொருத்தமற்ற உடல்களைப்போல் இயங்கியது. முகத்தில்பட்ட ஈரக்காற்று அவளது சிறு தொடல்களை நினைவுபடுத்தியது. குறிப்பாகக் கடற்கரையில் அமர்ந்து பேசிய இரவுப் பொழுதுகள். அதிலிருந்து மாறிக்கொள்ள வேண்டுமெனத் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தேன். செய்திசேனலை கடந்து செல்லும்போது புயல் சின்னம் உருவாகியிருப்பதற்கான அறிகுறி தென்படுவதாக வானிலை இயக்குநர் ரமணன் கூறினார். செய்திகளின் நம்பகத்தன்மையைக் கோடிக்கணக்கான தமிழ் நேயர்கள் எங்ஙனம் எதிர்கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. குறிப்பாக இந்த சென்னை மாநகராட்சி தமிழ்ச் சமூகம். தனது அன்றாடப் பணிகளை இன்னமும் சில மணித்துளிகளில் தொடங்கிச் செயல்படவுள்ளது. புயலொன்று அதற்கு ஒரு பொருட்டல்ல. அருகாமை ஜீவன் செத்தொழிந்தாலும் தன் வயிறு நிரம்ப வேண்டுமென்ற வெறித்தனமான எண்ணத்தில் சூழலும் பரதேசிகள்.

தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும் சென்னை வாசிகளுக்கும் அதிக தொடர்பிருக்கிறது விளம்பரங்களின் வேகமும் அதிலிருக்கும் பாதி நிர்வாணமும் அன்றாடம் நகரத்தின் பிரதான சாலைகளில் காணும் நபர்களின் மன நிலையைத்தான் பிரதிபலிக்கிறது. தூரத்தில் சித்தாள் பெண்கள் வேலைக்குக் கிளம்பிச் செல்வதற்குத் தயாராகி நிற்பது தெரிந்தது. ஒரே நேரத்தில் தொலைக்காட்சியையும் ஜன்னலின் வழிச் சாலையையும் பார்ப்பது உவப்பானதாகவே இருந்தது. பொருட்களின் நம்பிக்கையைச் சொல்லும் விளம்பரங்கள் தொடர்ந்து வந்தது. சேனலை மாற்றாமல் பார்த்தேன். கட்டிடத்தின் பலத்திற்குத் தேவையான இரும்புக்கம்பி விளம்பரமும் உடலுறவு பாதுகாப்பிற்கு ஆணுறை விளம்பரமும் சில நொடிகளில் ஓடி மறைகிறது. அதிகாலையில் ஆணுறை விளம்பரத்தைப் பார்ப்பதற்கு ஒரு மனநிலை இருக்க வேண்டும். ஆசை முழுவதும் இரவே வடிந்துவிட்டால் எப்படி ஆணுறை விளம்பரப் பெண்ணின் மார்பகத்தைக் காட்சி மாற்றத்தினூடே கண்காணிப்பது?

வீசும் காற்று பலம் பெறத் தொடங்கியிருந்தது. பலத்த ஓசையுடன் ஜன்னல் கதவுகள் மூடித் திறப்பதும் சாலையில் ஓடும் வாகனங்களின் சப்தமும் ஒன்றாகக் கேட்டன. செய்தி சேனலின் கீழ் போட்ட ப்ளாஷ் நியூசில் புயல் சின்னம் உருவாகி மையம் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினார்கள். இதே போலக் கடந்த முறை இப்படியான ஒரு புயல் சின்னம் உருவாகி கரையைக் கடந்த சமயம் ஜெனாலீனாவிற்காக இதே சாலை முடியும் இடத்திலுள்ள ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். எதற்கும் பின்வாங்காத சென்னைவாசிகள் அப்போதும் ரயிலுக்குக் காத்திருப்பதற்காகவே பிறந்தவர்கள் போன்று நின்றிருந்தனர். மதுரை ஜனங்களுக்குக் கோவிலும் சினிமா தியேட்டரும் போல இங்கிருப்பவர்களுக்கு ரயிலும் சில தெருக்களும்.

ஜெனாலீனா அன்று மஞ்சள் புடவையில் நீலம் மற்றும் ஊதாநிற பூக்களைக் கொண்ட சேலையை உடுத்தியிருந்தாள். பார்ப்பதற்கு மிக அழகாய் இருந்தவளிடம் பேசுவதற்கு மனமே இல்லை. வார்த்தைகள் அர்த்தமற்று போகின்ற கணங்கள் அவை. அப்படியாகப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவள் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அவளுடன் அன்று ராஜ்குமார் வந்திருப்பதை பிறகுதான் கவனித்தேன். அவனை ஏற்கனவே ஸ்பென்சரில் வைத்து அறிமுகம் செய்திருக்கிறாள். அவனது குதிரை உயரம் என்னை நிமிர்ந்து உட்காரச் செய்தது. ஸ்பென்சரில் பார்த்ததைவிட இன்று கூடுதல் உயரமாக அவன் இருப்பது மாதிரி தோன்றியது. ராஜ்குமார் என்னருகே நிற்காமல் பிளாட்பாரம் அருகே இருந்த புத்தகக்கடைக்குச் சென்று நின்றுகொண்டான். அவனது விலகல் எனக்குள் சிறிது நிம்மதியின்மையைத் தோற்றுவித்தது. ஜெனாலீனா என்னிடம் தனது காதலைத் துண்டித்துக்கொள்வதாய்ச் சொன்னாள். ஏதோ குழாய் வரி கட்டாத வீட்டின் குழாய் இணைப்பைத் துண்டிக்கச் சொல்வதுபோல அவளது பேச்சு இருந்தது. அவன் முன்னால் ஜெனாலீனாவை அலட்சியப்படுத்தினால் எனக்குச் சாதமாக அமையுமெனப் பேசாமல் எழுந்து வந்து கடற்கரைக்குச் செல்லும் ரயிலில் ஏறினேன்.

இப்போது நினைத்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது. அவள் அதற்குப்பிறகு என்னுடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளவில்லை. ஆனால் வழக்கமாக நாங்கள் சந்தித்துக்கொள்ளும் இடங்களிலெல்லாம் அவளுடன் ராஜ்குமாரையும் பார்க்க முடிந்தது. ராஜ்குமார் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவனது கண்களில் தெரிந்த கிண்டலும் கேலிச் சிரிப்பும் என்னை அறையிலேயே முடங்கிக் கிடக்கச் செய்தது.

என் அறையின் கீழே இருந்த கடைகள் திறக்கத் தொடங்கின. தேநீருக்கும் காபிக்கும் பண்களையும் வட்ட பிஸ்கட்டுகளைத் தொட்டுத் தின்ன நபர்கள் கூடியிருந்தனர்.

எனக்கான தேநீரும் சிகரெட்டும் காத்துக்கொண்டிருந்தது என்ற எண்ணம் தோன்றியதால் தொலைக்காட்சி பெட்டியை அணைத்துவிட்டு கீழே சென்றேன். சாலையில் சித்தாள் பெண்கள் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் வராத பேருந்தைத் திட்டி தீர்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் வைத்திருந்த கூடைகளில் தண்ணீர் பாட்டிலும் தூக்குவாளியும் இருந்தன. அவர்களைக் கடந்தபோது குழம்பின் வாசனை அடித்தது. கருவாட்டுக் குழம்பாக இருக்கலாம். உடல்கள் மெலிந்து போய் காணப்பட்டது துயர் தருவதாய் இருந்தது.

டீக்கடையில் இருந்த மூன்று கால் பிளாஸ்டிக் வட்ட ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டேன். நான் கேட்காமலே கடைக்காரர் டீயும் ஒரு கோல்டுபிளாக் சிகரெட்டும் என்னருகே வைத்துவிட்டுச் சென்றார். கடைமுழுக்க சிகரெட் புகைதான். புகை சங்கமம். மனித சேகரம்.

காற்று அதிகமாக வீசியது. செய்தித்தாள்கள் பறந்தன. கடையில் தொங்கிய போஸ்டர்கள் கிழிந்து விழுந்தன. தேநீர் குடித்து முடித்தபோது மழை பெய்யத் தொடங்கியது. சாலையில் நடந்துகொண்டிருந்தவர்கள் தயங்கி நின்று கடையின் ஓரத்தில் ஒதுங்கத் தொடங்கினர். நான அவசரமாக சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு எனது அறைக்குச் சென்றேன். ஜன்னல் வழியாகப் பார்த்தபோது எதிரேயிருந்த கடைகளின் தகரகொட்டகை தனியாக பிய்ந்து காற்றில் இரண்டு மூன்று அடிக்குப் பறந்து விழுந்தது..

தகரத்தின் கூர்மையும் அதன் பளபளப்பும் என்னிருப்பிடத்திலிருந்தே மரணத்தின் பயத்தை வரவழைத்தது. அதைப் போக்க மீண்டும் தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து கொண்டேன். காலை ஏழு மணியைக் கடந்திருந்தது. காலைத் தென்றலில் எவ்வித கவலையுமின்றி காதலர்கள் இயற்கையோடும் தங்களது கோரஸ் குழுக்களோடும் ஆடிபாடிக்கொண்டிருந்தனர். இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டேன். எனது அலுவலகத்திற்குச் சென்று வரலாமா அல்லது செல்போனில் விடுப்பு சொல்லிவிடலாமா என்று யோசித்தபடி இருந்தேன். செய்தி சேனலுக்கு மாற்றினேன். புயல் வெள்ளத்தினால் சென்னையில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளின் அவலத்தை நேரடி ஒளிபரப்பாகக் காட்டிக்கொண்டிருந்தனர் விளம்பரங்களுக்கிடையே.

எனது செல்போனில் கிளை அலுவலக மேலாளர் தொடர்பு கொண்டார். வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து மேலாளர் இரண்டு அல்லது மூன்று தடவை மட்டும் செல்போனில் பேசியுள்ளார். அவர் பேசுவது முன் கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டு வசனங்கள் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போலவே இருக்கும். ரிங்டோனில் இருந்த கத்தாழைக் கண்ணாலே என்ற பாடலின் முதல்வரி முடியும் முன்பே எடுத்துவிட்டேன்.

 

“ஆபிசுக்கு கிளம்பிடீங்களா வாசு“

“சார்“

“ஆபிசுக்கு சீக்கரமா வாங்க, நம்ம ஏரியாவில வாட்டர் புகுந்துச்சு, முத்துக்குமார் லீவு, நீங்களும் ஷர்மிளாவும்தான் மேனேஜ் பண்ணனும் கம் குவிக்“

“சார் இன்னிக்கு லீவு எடுத்துகாலம்னு இருக்கேன்“

“யாரை கேட்டு முடிவு பண்ணீங்க, அதெல்லாம் முடியாது, கம் குவிக்“

“ சார்“

“ நோ ஆர்க்கியூமெண்ட் கம் குவிக், அதர்வைஸ் ஐ வில் டேக் சிவியர் ஆக்‌ஷன்“

“ எஸ் சார் ஐ ஆம் கம்மிங்“

செல்போனைத் தூக்கி எறிய வேண்டும் போலிருந்தது. இந்த செல்போனும் கம்பெனி கொடுத்ததுதான். இதே போனில்தான் ஒரு முறை தற்காலிக வேலை நிறுத்தமும் தந்தார்கள். கிளை மேலாளர் போன் செய்து பேசியபோது சினிமா தியேட்டரில் இருந்தேன். அலுவலக நேரம்தான், தவறில்லை. எல்லா அட்வைசர்களும் மனநிலையைச் சரிசெய்து கொள்ள செய்யும் செயல்தான். தியேட்டரைவிட்டு வெளியே வந்து கேண்டீன் முன் நின்றபடி பாலிஸி பற்றி வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொன்னேன். பொய்யைச் சரியாகச் சொல்லவில்லை. வாடிக்கையாளரின் பெயரைச் சொல்லியதில்தான் தப்பாகிப் போனது. நான் சொன்ன வாடிக்கையாளர் அன்று அவரது டேபிள் முன்னிருக்கையிலேயே உட்கார்ந்திருந்தார். அடுத்த சில நொடிகளில் செல்போனில் ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் தற்காலிக வேலை நீக்க உத்தரவு வந்துவிழுந்தது. மூன்று தினங்கள் அலுவலகத்திற்குள் நுழையவே விடவில்லை. அதற்குப்பின் அலுவலகத்திற்குள் போனபோது கிண்டல் தொனிக்கப் பக்கத்து சீட் சர்மிளா சிரித்தபடியே இருந்தாள்.

சர்மிளாவும் சாரதியும் காதலிக்கிறார்கள். வேலைக்குச் சேர்ந்த புதிதில் சாரதி அவளைக் காதலிப்பதாகச் சொல்லி விட்டான். சர்மிளாவுடன் பேசுவதில் எனக்குக் கூச்சமிருந்தது.

சாரதியின் முன்பே பலமுறை என்னிடம் இரட்டை அர்த்தம் தொனிக்கும்படி பேசுவது சர்மிளாவின் வழக்கமாயிருந்தது. எனக்குக் கூச்சத்தை வரவழைத்தபோதும் பொறாமையாகவும் இருந்தது. சர்மிளா எனக்குக் காதலிப்பதற்கு முன் மாதிரியாக இருந்தாள் என்று சொல்லலாம். அவளிடம்தான் முதலில் ஜெனாலீனாவின் உடனான காதலைச் சொன்னேன். அவள் நிராகரித்ததையும் சர்மிளாவிடம்தான் சொன்னேன். இரண்டு நிலையிலும் சர்மிளா ஒரே விதமான முகபாவத்தைத்தான் காட்டினாள்.

சாலையில் வெள்ளம் ஓடியது. நீர் சூழ்ந்த பகுதிகளில் எனது ஏரியாவையும் டிவியில் காட்டிக்கொண்டிருந்தனர். சர்மிளாவுக்கு போன் செய்து பேசவேண்டுமென அழைப்பு விடுத்தேன். “ சுவிட்ச் ஆப்“ செய்திருப்பதாக மறுமுனையில் பதில் வந்தது. குளித்து முடித்துவிட்டு வந்தபோது புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. உடை மாற்றிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு வெளியே வந்தபோது இந்த மழையில் எங்குப் போய் சாப்பிடுவது எனத் தெரியவில்லை. பேருந்தைத் தவிரப் போவதற்கு வேறு வழியில்லை. டூ வீலர் சூழ்ந்திருக்கும் தண்ணீரில் அரைப் பர்லாங்கு தூரம் கூடத் தாங்காது. பின்னர் அதையும் சேர்த்துத் தள்ளவேண்டும். படிகளில் கீழிறங்கி வந்தேன். செல்போன் ஒலித்தது. இந்த முறை புதிய எண்ணிலிருந்து சர்மிளா பேசினாள். சர்மிளாவிடமும் மேலாளர் ஆபீஸ் கிளம்பி வரச் சொல்லியிருக்கிறார்.

“கண்டிப்பாகப் போக வேண்டுமா?“ என்று என்னிடம் கேட்டாள்.

“நான் என்ன கிளை மேலாளரா?“ என அவளிடம் கேட்டேன்.

அவளது குரல் அழுவது போலிருந்தது. பிறகு பேசிக்கொண்டே அழுதேவிட்டாள். சாரதி நேற்று காலையிருந்தே சந்திக்கவில்லை என்றும் இரவு போன் செய்த போதும் அவன் எடுக்கவில்லை என்று கூறினாள். இந்த மழையில் எங்காவது சிக்கிக்கொண்டிருப்பான் என்றேன். அவனுக்கு என் மீதுள்ள ஈர்ப்பு கொஞ்ச நாளாகவே குறைந்துவிட்டது என்று கூறி மீண்டும் அழத்தொடங்கினாள். அவளை என்ன சொல்லித் தேற்றுவது எனத் தெரியவில்லை.

“எனது வீட்டிற்கு வரமுடியுமா” என்றாள். பதற்றமடைந்தவனாக “சரி“ என ஒத்துக் கொண்டேன். சாலை முழுக்க ஓடும் நீரைக் கிழித்துக்கொண்டு ஒன்றிரண்டு ஆட்டோக்கள் சென்று கொண்டிருந்தது. ஒன்றில் கை காட்டி ஏறிக்கொண்டு அவளது வீட்டின் முனையில் இறங்கிக்கொண்டேன். ஆட்டோக்காரன் இரண்டு மடங்கு ரூபாய் வாங்கினான். அவளது வீடும் மாடியில்தான் இருந்தது. முக்கால்வாசி எனது உடை மழையில் நனைந்து போய் இருந்தது. வீட்டில் அவளைத் தவிர யாருமில்லை. தனிமை ஒரு நிழலைப் போல அவளை தொடர்ந்திருக்க வேண்டும். மாற்றிக் கொள்ள டீ சர்ட்டும் பேண்டும் டவலும் கொடுத்தாள். சாரதிக்குக் கொடுக்க எப்போதோ எடுத்திருப்பாள் போல. மாற்றிக் கொள்ளும்போது என்னையே கண் எடுக்காமல் பார்த்தவள் எதிர்பார்க்காதவாறு என்னை நெருங்கி அணைத்துக் கொண்டாள். வெளியே பெய்த மழையின் ஓசை குறைந்தபடியே இருந்தது.


 

விஜய் மகேந்திரனின் “நகரத்திற்கு வெளியே” சிறுகதைத்தொகுப்பி இடம்பெற்ற சிறுகதை இது.  கலகம்  – கதைகள் சிறப்பிதழுக்காக இணைக்கப்பட்டுள்ளது. 

எழுதியவர்

விஜய் மகேந்திரன்
விஜய் மகேந்திரன் ,1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு ”இருள் விலகும் கதைகள்” என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வந்த இவர், இப்போது ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார். ”கடல்” எனும் பெயரில் பதிப்பகம் தொடங்கி பல இளம் படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிட்டும் வருகிறார்,

அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ”நகரத்திற்கு வெளியே” இவரது சிறுகதை தொகுப்பு. 2011 ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை சிறந்த சிறுகதை தொகுப்புக்காக ”நகரத்திற்கு வெளியே” பெற்றுள்ளது. இந்த தொகுப்பிலுள்ள சில கதைகள் உயிர் எழுத்து கதைகள் , சிக்கிமுக்கி கதைகள் , மதுரை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த விமர்சகருக்கான ”படி”அமைப்பின் விருதையும் பெற்றுள்ளார். . இவரது ”ஏ.ஆர்.ரஹ்மான் – நவீன இந்திய திரையிசையின் அடையாளம் ”புத்தகத்தை மின்னம்பலம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதுவரை இந்த நூல் நான்கு பதிப்புகளை கண்டுள்ளது. இவரது கட்டுரை தொகுப்பு ”சாமானிய மனிதனின் எதிர்குரல்” இவரது நாவல் ”ஊடுருவல்”ஆகியனவும் வெளிவந்துள்ளது.

இவரது தொடர் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ”அசோகமித்திரன் படைப்பூக்க விருது ”கொடுத்துள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x