சங்க்ராம் ஜெனா- ஒடியா கவிதைகள்


  • நாடோடி

இங்கு, அங்கு, எங்கும்
நாடோடியின் பயணம் முடிவதேயில்லை.
சாலையின் இரு புறமும்
நதிகளைப் பார்க்கிறான்,
மலைகளை, வயல்களை, காடுகளை,
கிராமங்களை, மரநிழலை,
பகலில்
இரவில் நட்சத்திர ஒளியையும்
நடக்கும் போது, சாலை நீளும் போது
காலம் தொடரும் போது,
தனிமையில்
சிலசமயம் உறவினர்கள் கீழே விழுந்தும்
நிலத்தில் ஊன்றிய
மரங்கள், வீடுகளைப் போல்.
ஆனால் சக்கரங்கள் சுழல்கின்றன
புதிய முகங்களைப் பார்க்க,
புதியவர்களை,
உறவில் புதிய அத்தியாயங்களை.
கூட இருப்பது
தொடுகைக்கு
சாலைபோல் நினைவு
பனியின் இடையில்
சூர்ய உதயம் முதல் அஸ்தமனம் வரை
உன் இருப்பின்மையை
நான் சுமந்து கொண்டிருப்பது போல
இந்த வாழ்விலும், பிறகும்.


  • புலி

எனக்கு மூன்று வயது இருக்கும்போது
நான் உன்னை என் பாடப்புத்தகத்தில் பார்த்தேன்.
கண்கள் சிவந்திருக்க, வாய் திறந்திருக்க
மூன்றுமுறை பார்வை தவறிப் போனபின்புதான்
நான் உன்னை நேரடியாகப் பார்க்க முடிந்தது.

எனக்கு ஒன்பது வயது இருக்கும் போது
நந்தன்டகன் மிருகக் காட்சி சாலையில்
உன்னைப் பார்த்தேன்.
இரும்புவேலிக்கு வெளியிலிருந்து
பார்வையாளர்கள் மீது அலட்சியப் பார்வையுடன்
ஒரு சிறு மரத்தடி நிழலில்
நீ தூங்கிக் கொண்டிருந்தாய்.

என் அப்பாவின் கைகளைப்பற்றிக்கொண்டு
நான் உன்னைப் பார்த்தேன்.

பல ஆண்டுகள் கடந்து விட்டன.
நான் ஐம்பதுகளின் மத்தியில்
இருந்தபோது ஒரு சர்க்கஸில்
காலரியில் உட்கார்ந்து கொண்டு
என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு
உன்னை பார்த்தேன்
கட்டக்கில் மகாநதியின் கரையில்.

உன் நிறம் மினுங்கவில்லை
உன் வாயைத் திறந்த போது
சில பற்களைப் பார்க்க முடிந்தது
உன் கண்கள் களையிழந்திருந்தன.

பணிவான மாணவனைப் போல
உன் தலைவனின் கைத்தடியின் ஆணைக்கு
இணங்கி நடந்தாய்

கூட்டத்தின் கைதட்டலுக்கு
நீ தலையைக் குனிந்தாய்
உன் கண்களில் மினுக்கம் இல்லை
எங்களைப் போல நீ ஆகிவிட்டாயா?


  • குறி

குறியில்லாமல் ஏதாவது இடம் உண்டா?
சூரிய அஸ்மனத்திற்குப் பின் வானில்
மழைக்குப் பிறகு பூமியில்
துக்கத்திற்குப் பின் இதயத்தில்
வழிபாட்டிற்குப் பின் சிலையில்
புணர்ச்சிக்குப் பின் உடம்பில்.

குறியை அழிக்க முடிகிறதா?
அழித்தபின் மறைகிறதா?
இந்திரனின் குறி
அகல்யாவின் உடம்பில் ஆனது
கடம்பா மரத்தின் விளைவை
யமுனா கைக்கொண்டது
என் கவிதைகளின் பக்கங்களில்
உன் ரேகைக்குறி இருப்பது போல்.
மோதிரத்திற்காக சகுந்தலை தேடல்
பயனுள்ளது போல்
நதியில்
மீன்களின் கூட்டத்தில்
அரச சபையில்
யாரோடையதன் நகத்தை
சந்திரசேனா தேடியவகையில்,
ராதாவின் உடம்பில்
பல்குறிகள்…..

குறிகள் ஆன்மீகத்தின்
அயர்ச்சியில்லாமல்
நாம் குறிகளைத் தேடி எப்போதும்
காதலிப்பது முதல்
மரணத்தைச் சந்திப்பது வரை.


ஒடியா: சங்க்ராம் ஜெனா

தமிழில்: சுப்ரபாரதிமணியன்

 

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page